டெல்லி: சட்டவிரோத பண பரிவர்த்தனை மோசடி வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை செய்தது செல்லும், காவலில் எடுத்து விசாரிக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை மோசடி தடுப்பு சட்ட வழக்கின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். பின்னர், மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயன் இந்த வழக்கை விசாரித்து நீதிபதி பரத சக்ரவர்த்தி வழங்கிய தீர்ப்பில் உடன்படுவதாகவும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் சட்டத்திற்கு முன்பு விசாரணைக்கு ஏற்றவர் என்றும் தீர்ப்பு அளித்தார்.
இதையும் படிங்க: "நாட்டை காப்பாற்றினேன், மனைவியை காப்பாற்ற இயலவில்லை": மணிப்பூர் பெண்ணின் கணவர் கதறல்!
அதோடு, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் எனவும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு எனவும் கூறி உத்தரவிட்டார். இவரின் இந்த உத்தரவை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா மற்றும் எம்.எம். சந்தரேஷ் அமர்வில் இன்று விசாரனைக்கு வந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கபில் சிபல், வங்கி மோசடி வழக்கில் கைதான விஜய் மதன்லால் சவுத்தரி வழக்கை பிரிவு எண் 167 CrPc-யின் கீழ் சுட்டிக்காட்டி, அதன் அடிப்படையில் குற்றவாளி என கருதப்படும் நபரை காவலில் எடுத்து விசாரிக்க அம்மாநில காவல்துறைக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது எனவும் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது எனவும் வாதிட்டார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 26 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு - இலங்கையில் யுபிஐ அறிமுகப்படுத்த ஒப்பந்தம்!