பெங்களூரு: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு இளம்பெண் எழுதியுள்ள கடிதத்தில், பாலியல் சிடி விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அமைத்து, உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில், “என் பெற்றோர் வாக்குமூலம் அளிக்ககோரி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். ரமேஷ் ஜர்கிஹோலி (முன்னாள் அமைச்சர்) அதிகார பலம் பொருந்தியவர், அவரால் எங்கள் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், எனக்கும் என் பெற்றோருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
கர்நாடகத்தின் முன்னாள் அமைச்சரான ரமேஷ் ஜர்கிஹோலி இளம்பெண் ஒருவருடன் அதீத நெருக்கத்தில் இருப்பதுபோன்ற காணொலி சி.டி.க்கள் வெளியாகி மாநிலத்தில பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக அமைச்சருக்கு எதிராக மார்ச் 2ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் அவர் தனது அமைச்சர் பதவியை மார்ச் 3ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
பாதிக்கப்பட்ட பெண் அமைச்சர் தனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்து ஏமாற்றினார் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் சம்பந்தப்பட்ட பாலியல் சி.டி பொய்யானது, தனக்கு எதிராக சதி செய்யப்பட்டுள்ளது” என்று ரமேஷ் ஜர்கிஹோலி கூறியுள்ளார். ரமேஷ் ஜர்கிஹோலி பாலியல் சிடி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாநில முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா அமைச்சரவையில் உள்ள 6 அமைச்சர்கள் தங்கள் தொடர்பான ஆவணங்கள் ஏதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என்று தடை வாங்கினார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: கர்நாடக அமைச்சர் சிடி வழக்கு: பெண்ணின் பெற்றோர் வாக்குமூலம் பதிவு!