புதுச்சேரி: காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாக தண்டனை பெற்று வரும் கைதிகளை நன்னடத்தையின் அடிப்படையில் விடுவிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் சமூக அமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில், புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமை நீதிபதி செல்வநாதன், தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, நீதி செயலர் கார்த்திகேயன், ஏடிஜிபி ஆனந்த மோகன், சிறை துறை ஐ.ஜி ரவிதீப் சிங் சாகர், கண்காணிப்பாளர்கள் விஷ்ணு குமார் மற்றும் செல்வம் உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
![உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/16706435_pudu.jpg)
இக்கூட்டத்தில் 27 கைதிகள் பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்பட்டு, அவர்களின் குற்றப் பிண்ணனி மற்றும் தண்டனை காலம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே கூட்டத்தில் யார், யார் விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் இதேபோல் நடந்த கூட்டத்தில் நான்கு தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் புதுச்சேரி அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குண்டர் சட்டத்தை எதிர்த்து வழக்கு - சென்னை காவல் ஆணையர் பதிலளிக்க உத்தரவு