டெல்லி: ஆண்டுதோறும் ஏப்.24ஆம் தேதி 'தேசிய பஞ்சாயத்து ராஜ்' தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பாலி பஞ்சாயத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப்.24) ஜம்மு காஷ்மீர் சென்றடைந்தார். மேலும், அங்கிருந்தவாறே நாடு முழுவதும் உள்ள கிராம சபைகளுடன் உரையாற்றுகிறார்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, அரசியல் சாசனத்தின் 370 மற்றும் 35ஏ பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு பிரதமர் மோடி முதல்முறையாக ஜம்மு யூனியன் பிரதேசத்துக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
'அம்ரித் சரோவர்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார். நாட்டில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்துவதற்காகவும், புனரமைப்பதற்காகவும் இந்த திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. மேலும், 3,100 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பனிஹால் -காசிகுண்ட் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
8.45 கிமீ நீளமுள்ள இந்த சுரங்கப்பாதை பனிஹால் மற்றும் காசிகுண்ட் இடையேயான சாலை தூரத்தை 16 கிமீ ஆக குறைக்கும். இதன்மூலம் பயண நேரம் ஒன்றரை மணிநேரமாக குறையும் என்றும், எரிபொருள் மிச்சப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரட்லே மற்றும் குவார் நீர்மின் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்.
பிரதமரின் வருகைக்காக பாலி கிராமம் முழுவதும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். அந்தவகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவின் முக்கிய நகரங்களில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: லதா மங்கேஷ்கர் பெயரில் முதல் விருது - பிரதமருக்கு நாளை வழங்கப்படுகிறது...!