புதுச்சேரி: ரங்கசாமி இன்று (நவ. 12) அவரது அலுவலகத்தில் செய்தியாளரைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரியில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்த கனமழையின் காரணமாக புதுச்சேரியிலுள்ள 84 ஏரிகளில் 54 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. மீதமுள்ள ஏரிகள் விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளன.
புதுச்சேரியில் சராசரியாக 130 செ.மீ. மழை பெய்யும்; இந்தாண்டு மொத்தமாக 184 செ.மீ. மழை பெய்துள்ளது. காரைக்கால் பகுதியில் மழையினால் ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், பாதிப்படைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய், மழையால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளர், மீனவர்களின் குடும்ப அட்டைக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.
ரூ.500 கோடி செலவில் குடிநீர்த் திட்டம்
புதுச்சேரியில் விளைநிலங்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுவருகிறது. பின்னர் ஒன்றிய அரசிடம் நிதி கேட்கப்படும். புதுச்சேரி நகரப் பகுதிகளில் மழைநீர் வடிகால் சரிசெய்யப்படும் அடுத்த ஆண்டுக்குள் மழை நீர் தேங்கிய பகுதிகளில் சீர்செய்யப்படும்.
பழுதான சாலைகள், புதிய சாலைகள் போடுவதற்காகப் பொதுப்பணித் துறை மூலம் 100 கோடி ரூபாய்க்கு மேல் டெண்டர் விடப்பட்டுள்ளது; விரைவில் சாலைகள் செப்பனிடப்படும். பாதுகாப்பான குடிநீர்த் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும், இதற்காக ஒன்றிய அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி