அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் புதுச்சேரி புதிய தலைமை அலுவலகம் ரெட்டியார்பாளையம் நேற்று (நவம்பர் 26) திறக்கப்பட்டது. இந்த விழாவில் கட்சியின் நிறுவனர் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் வாரியத் தலைவர்கள், மக்களவை உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், கட்சியின் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இன்று (நவ.27) என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்த புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் கிழக்கு மாநில செயலாளரும், சட்டப்பேரவை கட்சித் தலைவருமான அன்பழகன் எம்.எல்.ஏ., தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள், என்.ஆர் காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக அமைதிக் காத்துவந்த முன்னாள் முதலமைச்சர் என்.ரங்கசாமியை, அதிமுக பிரமுகர்கள் சந்தித்தது பாஜக - அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தொடர்கிறது என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மேலும், இந்த சந்திப்பு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு கூட்டணி கட்சிகளின் தொண்டர்களுக்கு உந்துதலை ஏற்படுத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இதன்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் வேல்முருகன், அக்கட்சியின் முன்னாள் எம்எல்ஏ நேரு ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க : விரிசலடையும் திரிணாமுல் காங்கிரஸ்: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சுவேந்து அதிகாரி