காசியாபாத் (உத்தரப்பிரதேசம்): முதியவர் தாக்கப்பட்டது தொடர்பாகப் பரவிய காணொலிக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில், ஆஜராக ட்விட்டர் முன்னாள் அலுவலர் உள்பட ஐந்து பேருக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னதாக இந்த வழக்குத் தொடர்பாக காசியாபாத் காவல்துறை கர்நாடக மாநிலத் தலைநகர், பெங்களூருவில் வசிக்கும் ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஷ்வரிக்கு ஜூன் 21ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
அதில் லோனி பார்டர் காவல் நிலையத்திற்கு ஜூன் 24ஆம் தேதிக்குள் சென்று புகார் குறித்து விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், அவர் காவல் நிலையம் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூன் 15ஆம் தேதியே ட்விட்டர் இன்க், ட்விட்டர் கம்யூனிகேஷன்ஸ் இந்தியா, தி வயர் பத்திரிகையாளர்கள் முகமது ஜுபைர் மற்றும் ராணா அயூப், காங்கிரஸ் தலைவர்கள் சல்மான் நிஜாமி, மஸ்கூர் உஸ்மானி, ஷாமா முகமது மற்றும் எழுத்தாளர் சபா நக்வி ஆகியோர் மீது காசியாபாத் காவல் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.
இச்சூழலில், ட்விட்டர் முன்னாள் குறைதீர் அலுவலர் தர்மேந்திர சதூர் உள்பட ஐவருக்கு காசியாபாத் காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இஸ்லாமிய முதியவர் மீது தாக்குதல்
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டம், லோனி நகரில் 'ஜெய் ஸ்ரீராம்' 'வந்தே மாதரம்' என முழக்கமிடாததால் தொழுகை முடித்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்துல் சமத் எனும் இஸ்லாமிய முதியவரை காவி உடை அணிந்து வந்த ஐந்து பேர் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதாகக் கூறி, உத்தரப்பிரதேச அரசு சமூக வலைதளங்கள் மீது வழக்குத் தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.