நீரைப் பாதுகாப்பதற்காக 'ஜல் சக்தி அபியான்’ (catch the rain) திட்டத்தினை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 22) தொடங்கிவைத்தார். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) நிதியின் ஒவ்வொரு காசும் மழைக்காலம் வரும்வரை மழைநீர் பாதுகாப்புக்காகச் செலவிடப்பட வேண்டும் என நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பஞ்சாயத்து தலைவர்கள் கலந்துகொண்டு, நீர் பாதுகாப்புப் பற்றிய தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.
உலக நீர் நாளான இன்று (மார்ச் 22) இத்திட்டத்தின் மெய்நிகர் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய மோடி, “இந்தியாவில் பெரும்பான்மையான மழைநீர் வீணடிக்கப்படுவது கவலைக்குரியது. இந்தியாவின் தன்னிறைவு என்பது நீர்வளம், நீர் இணைப்பைப் பொறுத்தது. இதன் வளர்ச்சி நீர்ப் பாதுகாப்பு இல்லாமல் சாத்தியமில்லை.
தண்ணீரை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும். 'கேட்ச் தி ரெய்ன்' திட்டம் நாடு முழுவதும், கிராமப்புற, நகர்ப்புறங்களில் மேற்கொள்ளப்படும். இது மார்ச் 22 முதல் நவம்பர் 30 வரை செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் நோக்கமானது, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க அனைத்து பங்குதாரர்களையும் ஊக்குவிப்பதே ஆகும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடு - சத்யபிரத சாகு