பெங்களூரு (கர்நாடகா): பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இரண்டு நாள் பயணமாக கர்நாடகா மாநிலம் சென்றுள்ளார்.
அந்தவகையில் இன்று (ஜூன் 20) பெங்களூருவில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும், அங்கு நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கர்நாடகா முழுவதும் ரூ. 4700 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 150 தொழில் நுட்ப மையங்களை தொடங்கி வைத்தார். டாடா நிறுவனம், மாநில அரசு நிதியுதவியில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொழில் நுட்ப மையங்கள் மூலம் தொழில் நுட்பப் பிரிவில் உயர் திறன் பயிற்சி வழங்குவதோடு, பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநில அமைச்சர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 4-வது நாளாக அமலாக்கத்துறை முன் ஆஜரான ராகுல் - நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்