ராஜமகேந்திரவரம் (ஆந்திரா): ஆந்திராவின் ராஜமகேந்திரவரம் சிறையில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப்பிரதேச முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவை, இன்று (செப் 14) நடிகரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேரில் சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பவன் கல்யாண், வரக்கூடிய தேர்தல்களில் ஜனசேனா - தெலுங்கு தேசம் கட்சி இணைந்து போட்டியிடும் என கூறினார். இது குறித்து பவன் கல்யாண் மேலும் கூறுகையில், “ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியால் ஆந்திரப்பிரதேசம் தாங்காது, எனவே, நான் இன்று ஒரு முடிவு எடுத்து உள்ளேன்.
வரக்கூடிய அடுத்த தேர்தல்களில் ஜனசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி இணைந்து போட்டியிடும். ஜெகனின் (ஆந்திர முதலமைச்சர்) நிர்வாகம் நன்றாக இருந்திருந்தால், நானும், பாலகிருஷ்ணா மற்றும் லோகேஷ் ஆகியோரும் அரசியல் ரீதியாக சந்திக்கத் தேவை இல்லாமல் இருந்திருக்கும். சந்திரபாபு கைது செய்யப்பட்டு இருப்பது அரசியல் பழிவாங்கல் மட்டுமே.
அராஜகத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் வந்து விட்டது. சந்திரபாபு மீது சட்ட விரோத வழக்குகள் போட்டு சிறைக்கு அனுப்பியது வருத்தம் அளிக்கிறது. கொள்கை முடிவுகளில் இருவருக்கும் உள்ள கருத்துகள் வேறுபடலாம். தெலுங்கு தேசம் - ஜனசேனா போராட்டத்தில் பாஜகவும் இணையும் என நம்பலாம்.
யார் வந்தாலும் அல்லது சென்றாலும், தெலுங்கு தேசம் - ஜனசேனா அடுத்த தேர்தல்களில் இணைந்தே போட்டியிடும். ஜெகனை நம்பினால் நாய் வாலைப் பிடித்து கோதாரியில் நீந்துவது போன்று ஆகிவிடும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும். காவல் துறை இப்படி அடிமையாக இருந்தால், பொதுமக்கள்தான் பொறுப்பை எடுக்க வேண்டும். ஜெகனை நம்பிய வைகபா தலைவர்களே, உங்களது எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பாருங்கள்” என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, சந்திரபாபு நாயுடுவின் மகனும், தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலாளருமான நாரா லோகேஷ் மற்றும் நடிகரும், சந்திரபாபுவின் மைத்துனரும், ஹிந்துபூர் சட்டமன்ற உறுப்பினருமான நந்தாமுரி பாலகிருஷ்ணா ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக, தமது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் 371 கோடி ரூபாய் அளவில் ஊழல் புரிந்ததாக கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நந்தியாலா பகுதியில் வைத்து ஆந்திர சிஐடி காவல் துறையால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து ஒரு நாள் முழுவதும் மேற்கொண்ட விசாரணைக்குப் பிறகு, அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் தடை விதித்தது.
இதனிடையே, அவரது ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், சந்திரபாபுவின் வீட்டுக் காவல் மனுவையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து, தன் மீது ஆந்திர சிஐடி பதிவு செய்த வழக்கையும், விஜயவாடா சிறப்பு நீதிமன்றம் விதித்த நீதிமன்றக் காவலையும் ரத்து செய்யக் கோரி சந்திரபாபு தரப்பில் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் மீதான விசாரணையின்போது, பதில் மனு தாக்கல் செய்ய சிஐடி தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது. இதனால், செப்டம்பர் 18ஆம் தேதிக்குள் சிஐடி தரப்பு பதில் அளிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அதுவரை சிஐடி தாக்கல் செய்த காவல் மனு மீதான விசாரணை நடத்தக் கூடாது என விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை வருகிற 19ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உள்ளது.
இதையும் படிங்க: சிஐடி வழக்கு மீதான சந்திரபாபு நாயுடுவின் மனு ஒத்திவைப்பு!