மாநிலத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய்வை விடுவிக்க முடியாது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மேற்கு வங்கம் தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய் (alapan bandyopadhyay) இன்றுடன்(மே.31) ஓய்வு பெறுகிறார். ஆனால், மாநிலத்தின் முதலமைச்சராக மம்தா பொறுப்பேற்றவுடன் அவரது பணிக்காலத்தை மூன்று மாதங்களுக்கு நீட்டிக்குமாறு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தார்.
அவரது பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையில், அவரை உடனடியாக டெல்லிக்குத் திரும்புமாறு உத்தரவிட்டது. இந்த முடிவானது, சமீபத்தில் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற ஆய்வுக்கூட்டத்திற்கு முதலமைச்சர் மம்தா உட்பட அரசு அலுவலர்கள் தாமதமாக வந்ததன் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்றைச் சுட்டிக்காட்டி தலைமைச் செயலாளரை விடுவிக்க முடியாது என, முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்ததில், "தலைமைச் செயலாளரை விடுவிப்பதில், உங்களது ஒருதலைபட்ச உத்தரவால் அதிர்ச்சியடைந்து திகைத்துப் போயிருக்கிறேன்.
மே 24 ஆம் தேதி, தலைமைச் செயலாளர் பதவி நீட்டிப்புக்கு அனுமதி அளித்தீர்கள். ஆனால், நான்கு நாள்களுக்குள் ஏன் வந்தது இந்த திடீர் மன மாற்றம். சமீபத்தில் நடந்த ஆய்வுக்கூட்டத்திற்கும், இதற்கும் சம்பந்தம் இருக்காது என நம்புகிறேன். நான் உங்களுடன் வழக்கமான முதலமைச்சர் - பிரதமர் சந்திப்பு நடத்திடவே எதிர்பார்த்தேன்.
ஆனால், நீங்கள் அந்தக் கூட்ட விவாதித்தற்குத் துளியும் சம்பந்தம் இல்லாத சட்டப்பேரவை உறுப்பினரை அழைத்து வந்தீர்கள். தலைமைச் செயலாளர் விடுவிப்பு உத்தரவு, மாநில நலனுக்கு எதிரானது. தலைமைச் செயலாளர் தனிப்பட்ட துயரத்தில் சிரமப்பட்டு வருகிறார். இருப்பினும், அவர் தொடர்ந்து பணியாற்றுகிறார்" எனத் தெரிவித்தார்.