டெல்லி: 2021ஆம் ஆண்டு நடந்த தற்கொலைகள் தொடர்பாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "வேலை-தொழில் தொடர்பான பிரச்னைகள், தனிமை, வன்முறை, வன்கொடுமை, குடும்பப் பிரச்னைகள், உடல்நலக் குறைபாடு, பொருளாதாரச்சிக்கல், மது அடிமை உள்ளிட்டப் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டில் இந்தியாவில் மொத்தம் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இது 2020ஆம் ஆண்டை விட 7. 2 விழுக்காடு அதிகம்.
2021ஆம் ஆண்டில் நடந்த தற்கொலைகளில், அதிகளவு மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியுள்ளன. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,207 பேர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாட்டில் 18,925 பேரும், மத்திய பிரதேசத்தில் 14,965 பேரும், மேற்குவங்கத்தில் 13,500 பேரும், கர்நாடகாவில் 13,056 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
இந்த ஐந்து மாநிலங்களில் சுமார் 50 விழுக்காடு தற்கொலைகள் பதிவாகியுள்ளன. மீதமுள்ள 49.6 விழுக்காடு தற்கொலைகள் 23 மாநிலங்கள் மற்றும் 8 யுனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் மிகவும் குறைவான தற்கொலைகள் நடந்துள்ளன.
நகரங்களைப் பொறுத்தவரையில், அதிகபட்சமாக டெல்லியில் 2,840 பேர் தற்கொலை செய்து கொண்டனர். அடுத்ததாக புதுச்சேரியில் 504 பேர் தற்கொலை செய்துள்ளனர். 25,891 தற்கொலைகள் 53 பெருநகரங்களில் நடந்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி தூக்கிட்டு தற்கொலை