ஜெனரல் அருண் யுத் சேவா பதக்கம், சேனா பதக்கம், விஷிஷ்த சேவா பதக்கம் உள்ளிட்ட பதக்கங்களைப் பெற்றுள்ளார். ராணுவ தலைமையகத்தில் மூலோபாய திட்டமிடலில் பொது இயக்குநராக வெற்றிகரமாகச் செயல்பட்ட அவர் தற்போது புதிய பதவியில் பொறுப்பேற்றுள்ளார்.
இவர் முன்னணி துருப்புகளிலும் தேசத்தின் பாதுகாப்பைக் கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பிலும் சிறப்பாகச் செயல்பட்டார். ஆளுமைத்திறன், தலைமைப்பண்புமிக்க ஜெனரல் அருண் ஏராளமான பட்டறைகள்,பேச்சுகளை நடத்தியுள்ளார்.
இளமைக்காலம்
இவர் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டமாக இருந்த தற்போதைய திண்டுக்கல் மாவட்டத்தில் ஜூன் 1964இல் பிறந்தார். இவர் ஐ.ஐ.டி.ஜே.இ.யில் அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலில் 13ஆவது இடத்தைப் பெற்றிருந்தாலும், 1982 ஜனவரியில் தேசிய பாதுகாப்பு அகாதமியில் சேர முன்வந்தார்.
1985 ஆம் ஆண்டு டிசம்பர் 14 ஆம் தேதி 8 கிரெனேடியர்களாக நியமிக்கப்பட்ட இவர், இந்தியாவின் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் பணியாளர் கல்லூரி, பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் மையம், கான்பெர்ரா, ஆஸ்திரேலியா மற்றும் புதுடெல்லியின் தேசிய பாதுகாப்பு கல்லூரி ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்.
சவாலும் வெற்றியும்
புல்வாமாவில் (ஜம்மு காஷ்மீர்) ஒரு ராஷ்டிரிய ரைபிள்ஸ் பட்டாலியன், ஹேண்ட்வாராவில் உள்ள ராஷ்டிரிய ரைபிள்ஸ் துறையின் கமாண்டிங் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் ஒரு மலைப் பிரிவு ஆகியவற்றில் பணியாற்றியுள்ள இவர் பல்வேறு சவாலான விஷயங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்திய ஒரு ஆபரேஷனில் பலத்த காயமடைந்த ஜெனரல் அருணுக்குத் துணிச்சலுக்கான சேனா பதக்கம், மோதலில் சிறந்த தலைமைத்துவத்திற்கான யுத் சேவா பதக்கம், சிறப்பான தலைமை மற்றும் சிறந்த சேவைக்கான விசித் சேவா பதக்கம்பெற்றவர்.
சர்வதேசத்தில் பங்கு
கம்போடியா, சியரா லியோனில் உள்ள சர்வதேச பணிக்குழுக்களில் பணியாளர்கள் மேலாண்மை மற்றும் தளவாடங்களைத் திட்டமிடுவதிலும் வழங்குவதிலும் அவருக்குப் பரந்த அனுபவம் உள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபை நடத்திய மதிப்புமிக்க மூத்த மிஷன் தலைவர்கள் தொடர்பான கற்றலில் கலந்துகொண்டார்.
பாதுகாப்பு, மூலோபாய மேலாண்மை, தேசத்தைக் கட்டியெழுப்புதல், மோதல் தடுப்பு மற்றும் கிரியேட்டிவ் ரைட்டிங் ஆகியவற்றில் பல முதுகலைப் பட்டங்களைப் பெற்றவர்.
குடும்பம்
பெங்களூருவில் உள்ள கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளியில் நிறுவனர் முதல்வராக இருக்கும் ரூபா என்பவரை ஜெனரல் அருண் திருமணம் செய்துகொண்டார். தம்பதிக்கு ஜெபிர் என்ற மகள் உள்ளார், இவர் தனது கல்வியில் இறுதியாண்டு படித்துவருகிறார்.