சண்டிகர்: பாஜக தலைமையிலான ஹரியானா அரசாங்கம் புதன்கிழமை (மார்ச் 10) நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தது. அப்போது 55 உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவு அளித்ததையடுத்து ஆளும் பாஜக தலைமையிலான மனோகர் லால் கட்டார் கூட்டணி அரசு தப்பியது.
பாஜக அரசுக்கு எதிராக அனைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் 5 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்பட 32 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் (காங்கிரஸ்) கூறுகையில், “காங்கிரஸ் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத தீர்மானத்தில் மாநில அரசு வென்று இருக்கலாம். ஆனால் மக்கள் மன்றத்தில் விழுந்து விட்டது.
பாஜக கூட்டணியில் உள்ள ஜன்நாயக் ஜனதா கட்சி மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதி மற்றும் விவசாய சட்டங்களுக்கு எதிராக வாக்களிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.

நாங்கள் விவசாயிகளுடன் உறுதியாக நிற்கிறோம். எங்களது ஆதரவை அவர்களுக்கு முழுமையாக வழங்குகிறோம். விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றார்கள். அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்படுகின்றன.
கடும் குளிர் காலம் என்றும் பாராமல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகின்றன. பொய்யான வழக்குகளில் சிக்க வைக்க பார்க்கின்றனர். இங்கு மற்றொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். நாங்கள் இரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரியிருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. இது ஆளுங்கட்சியின் பயத்தை காட்டுகிறது.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள், விவசாயிகள் மீதான அட்டூழியங்கள், வேலையின்மை, பணவீக்கம், ஊழல் மற்றும் குற்றங்கள் குறித்த பிரச்சினைகளை எழுப்பினார்கள். இந்த, விஷயங்களில் உண்மை மற்றும் தெளிவான பதில்களைக் கொடுப்பதற்கு பதிலாக, ஆளும் அரசாங்கம் சொல்லாட்சியை கையிலெடுத்து குரலை ஒடுக்குகிறது” என்றார்.
இதையும் படிங்க: கடுமையாக காயமுற்ற மம்தா பானர்ஜி- மருத்துவ அறிக்கை பகீர்!