கேரளா: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடக்கல் தாலுகாவில் வச்சிகோணம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் வாமதேவா(68). இவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடக்கல்லில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், முதியவர் சிகிச்சைப் பலன் இன்றி மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார். பிரேதப் பரிசோதனை முடிவடைந்து நேற்று (ஜூலை 1) காலையில் முதியவர் வாமதேவாவின் உடல், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு சென்று இறுதிச் சடங்குகளுக்கு ஏற்பாடு செய்து உள்ளனர். அப்போது உடலைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அது முதியவர் வாமதேவாவின் உடல் இல்லை.
இதையடுத்து, உறவினர்கள் அந்த உடலை எடுத்துக் கொண்டு கடக்கல் மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு மருத்துவமனை ஊழியர்கள், முதியவரின் உடலை தேடிக் கண்டுபிடித்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அப்போது, அது முதியவரின் உடல் தானா என்று மீண்டும் சோதனை செய்து, உறுதிப்படுத்த பின்னரே உறவினர்கள் உடலை வாங்கிச் சென்றனர். பின்னர், வீட்டிற்கு சென்று இறுதிச்சடங்கை நடத்தினர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் மீண்டும் ஊருக்குள் புகுந்த மக்னா - அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்
முதியவரின் உடல் மாற்றிக் கொடுக்கப்பட்ட சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனை ஊழியர்கள் முதல் முறை உடலைக் கொடுப்பதற்கு முன்பாக, அதனை முதியவரின் உறவினர்களிடம் காண்பித்து உள்ளனர். ஆனால், முதியவர் நீண்ட நாட்களாக வெண்டிலேட்டரில் சிகிச்சைப் பெற்று வந்ததால், உடலின் தோற்றம் மாறிவிட்டதாகவும், அதனால் உறவினர்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை என்றும் தெரிகிறது.
மேலும், ஊழியர்கள் முதியவரின் உடலுக்கு பதிலாக, ராஜேந்திரன் நீலகண்டன் என்பவரது உடலை கொடுத்ததும் தெரியவந்தது. அதே நேரம், முதியவரின் உடல் தவறாக இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், உடலை மாற்றிக் கொடுப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்றும் தெரிகிறது. உடலை உரிய இடத்தில் வைக்காமல், மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது சம்பவம் தொடர்பாக, அம்மாநில சுகாதாரத்துறை விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதுபோல உடலை மாற்றிக் கொடுக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் பல அரசு மருத்துவமனைகளில் நடந்துள்ளன. பெரும்பாலும் ஊழியர்களின் அலட்சியத்தாலேயே இந்த சம்பவம் நடக்கின்றன. கடந்த ஜனவரி மாதம், மதுரை அரசு மருத்துவமனையில் விபத்தில் இறந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக வேறொரு பெண்ணின் உடலை மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்தனர். இறுதிச்சடங்கின்போது தான் உடல் மாறியது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.