டெல்லி: இந்தியாவின் வடக்கு பகுதிகளில் உள்ள டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.23) அதிகாலை டெல்லியில் 8 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் நிலவியது.
இதன் காரணத்தால் டெல்லி முழுவதும் பல சாலைகளில் பனி சூழ்ந்து காணப்படுகிறது. இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இனி வரும் சில தினங்களுக்கு டெல்லி மற்றும் வடக்கு இந்தியா பகுதிகளில் பனிமூட்டம் நீடிக்கும் எனவும், பனியால் நகரங்கள் மூழ்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையத்தின் தலைவர் டாக்டர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா, இந்தோ-கங்கை சமவெளிகளில் நிலவி வரும் குறைந்த வெப்பமண்டல ஈரப்பதம் மற்றும் லேசான காற்று காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு பஞ்சாப், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடர்த்தியான மற்றும் மிகவும் அடர்த்தியான மூடுபனி இருக்கும் என்றார்.
டெல்லியில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அடர்த்தியான மூடுபனியைக் காணக்கூடும். அதே நேரத்தில் பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் ஆகிய நகரங்களில் வெப்பநிலை 1- 2 டிகிரிக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக என தெரிவித்தார்.
இதற்கிடையில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் சாலைகளில் வாகனங்கள் மிகவும் மெதுவாக செல்கின்றன.
இதையும் படிங்க:ஹைதராபாத்: விபத்தில் 8 மாத கர்ப்பிணி உயிரிழப்பு