குருகிராம் :அரியானாவில் மத ஊர்வலத்தில் வெடித்த வன்முறை மற்றும் துப்பாக்கிச் சூட்டில் காவல் கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் வன்முறைச் சம்பவத்தில் ஏற்பட்ட மோதலில் அதிகளவிலான போலீசார் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ள நூ பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் - ஆல்வார் இடையே வந்த போது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலையான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து இரு தரப்புனர் இடையே மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது. இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் கிடைக்க நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்தினர். அப்போதும் கலவரம் அடங்காததால் கண்ணீர் புகை குண்டுகள் வீசி கூட்டத்தைக் கலைக்க முற்பட்டனர்.
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்ட நிலையில், தொடர்ந்து கலவரக்காரர்கள் மீதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் காவல் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் போலீசார் தடியடியில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வன்முறை நடந்த இடத்தில் இருந்த அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வன்முறைச் சம்பவத்தில் போலீசார் தரப்பில் பலர் படுகாயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலத்தில் வரும் புதன்கிழமை வரை இணையதள சேவை முடக்கப்பட்டு உள்ளது.
மத ஊர்வலத்தில் கலந்து கொள்ள வந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2 ஆயிரத்து 500 பேர் நுலார் மாதவ் கோயிலில் தஞ்சமடைந்து உள்ளனர். அவர்களை பத்திரமாக அப்புறப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது. பஜ்ரங் தள ஆதரவாளர்கள் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வீடியோ காரணமாக இந்த கலவரம் மூண்டதாகக் கூறப்படுகிறது.
மாநிலத்தில் பதற்றம் தொடர்ந்து நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : டெல்லி ஆளுநருடன் அரவிந்த் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு... அவசர சட்ட மசோதா குறித்து பேச்சுவார்த்தையா?