இந்தியாவில் கோவிட்-19 நிலவரம் குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டார். அப்போது அவர், "இந்தியாவில் கோவிட்-19 மூன்றாம் அலை ஏற்பட்டு அது குழந்தைகளை பெருமளவில் பாதிக்கும் என பலரும் கூறுகின்றனர். ஆனால், இது ஆதாரமற்ற தகவல் என பெரும்பாலான குழந்தைகள் மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை. மேலும், கறுப்பு பூஞ்சை நோய் எனப்படும் மியூக்கோர்மைகோஸிஸ் பாதிப்புக்கு மக்கள், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். சிறந்த சுகாதாரம், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியே கறுப்பு பூஞ்சை பாதிப்புக்கு நல்ல கவசமாகும்.
நீரிழிவு நோய், ஸ்டிராய்டு மருந்துகள் அதிகம் உட்கொண்டவர்களுக்கே இந்தப் பூஞ்சை பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் அல்ல" என்றார்.
இந்தியாவில் தற்போது கோவிட்-19 தினசரி பாதிப்பு இரண்டு லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. தொற்று காரணமாக ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டியுள்ளது.
இதையும் படிங்க: கறுப்பு, வெள்ளையைத் தொடர்ந்து ‘மஞ்சள் பூஞ்சை’ : அதிர்ச்சியில் மருத்துவ உலகம்!