டெல்லி:நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு விசாரணைக்காக, கடந்த 13ஆம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி முதல் முறையாக அமலாக்கத்துறையினர் முன்பு ஆஜரானார். அன்று சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. பின்னர் ஜூன் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது.
பின்னர் நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை மீண்டும் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், ராகுல் காந்தி நான்கு நாளான இன்று (ஜூன் 20) டெல்லியில் உள்ள அமலாக்கத்துறையில் ஆஜரானார். இதனிடையே காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விசாரணை ஜூன் 15 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது என்று கருதப்பட்ட நிலையில், அமலாக்கத் துறை ராகுலை ஜூன் 17 அன்று ஆஜராகும் படி சம்மன் அனுப்பியது. இதனை 3 நாட்கள் அவகாசம் தருமாறு ராகுல் கேட்டிருந்தார். இந்நிலையில் இன்றும் (ஜூன் 20) டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல் ஆஜாரானார்.
இந்த வழக்கில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் அமலாக்கத்துறையினர் வரும் ஜூன் 23ஆம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நேஷனல் ஹெரால்டு வழக்கின் வரலாறும்... முழுப் பின்னணியும்...