டெல்லி : தலைநகர் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் இரண்டு ஆண்டுகள் பணம் செலுத்தாமல் தங்கி விட்டு ஏறத்தாழ 58 லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து தப்பி தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லி இந்திரா காந்தி விமான நிலைய பகுதியில் ஹோட்டல் ரோசெட் ஹவுஸ் ஆப் ஏரொசிட்டி என்ற நட்சத்திர விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி அங்குஷ் தத்தா என்பவர் ஒரு இரவு மட்டும் தங்குவதற்கு அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது.
இதில் விடுதி பணியாளர் பிரேம் பிரகாஷ் என்பவர், அங்குஷ் தத்தாவுடன் இணைந்து மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. நட்சத்திர விடுதியின் நிர்வாக குழுவின் பணியாற்றி வரும் பிரேம் பிரகாஷ், பணம் பெற்றுக் கொண்டு அங்குஷ் தத்தாவை ஏறத்தாழ 603 நாட்கள் பணம் ஏதும் பெறாமல் தங்க வைத்ததாக சொல்லப்படுகிறது.
மேலும் நட்சத்திர விடுதியில் வேறு சில ஊழியர்களுக்கும் அங்குஷ் தத்தா பணம் கொடுத்து விடுதியில் நீண்ட நாட்கள் தங்குவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி ஒரு இரவு மட்டும் தங்குவதற்கு அங்குஷ் தத் அறை எடுத்ததாகவும், விடுதி நிர்வாகத்திற்கு தெரியாமல் 2021ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி வரை அவர் தங்கியதாகவும் விடுதி நிர்வாகம் போலீசில் புகார் அளித்து உள்ளது.
72 மணி நேரத்திற்கும் மேலாக தங்கியிருந்து கட்டணம் செலுத்தாமல் ஒருவர் இருந்தால், உடனடியாக ஹோட்டல் நிர்வாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது ஹோட்டலின் விதி என்று கூறப்படும் நிலையில் ஆனால் பிரேம் பிரகாஷ் அவ்வாறு செய்யாமல் மறைத்ததாக கூறப்படுகிறது.
அங்குஷ் தத்தாவின் விடுதி கட்டணத்தை மற்றொரு விருந்தினரில் கணக்கில் சரி செய்ய பிரேம் பிரகாஷ் முயன்றதாக விடுதி நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இதற்காக போலி மற்றும் பொய்யான பில்களை அவர் தயாரித்ததாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 10 லட்சம் 12 லட்சம், மற்றும் 20 லட்சம் ரூபாய்க்கான மூன்று காசோலைகளை அபிஷேக் தத்தா வெவ்வேறு தேதிகளில் செலுத்தியதாகவும், ஆனால் அவை திரும்பப் பெற்றதாகவும் ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
இரண்டு ஆண்டுகள் விடுதியில் தங்கிய அங்குஷ் தத்தா ஏறத்தாழ 58 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. ஹோட்டல் நிர்வாகம் அளித்த புகார் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : "காப்புரிமைகளுக்கு விதிவிலக்கு பெற்று அனைவருக்குமானது யோகா" - பிரதமர் மோடி!