மும்பை: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரும், தொழிலதிபருமான சைரஸ் மிஸ்திரி மும்பையில் உள்ள பால்கர் மாவட்டத்தில் நேற்று முன்தினம்(செப்-4) நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். மும்பை அகமதாபாத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சூர்யா ஆற்றுப் பாலம் அருகே இந்த விபத்து நடந்தது.
இந்த விபத்தில் மிஸ்திரி மற்றும் அவரது நண்பர் ஜஹாங்கிர் பண்டோல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் அந்த காரில் பயணித்த பெண் மருத்துவர் அனயாதா பண்டோல் முன் இருக்கையில் இருந்த அவரது கணவர் டேரியஸ் பண்டோல் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
விபத்து குறித்த விசாரணையில் சம்பவ இடத்தில் சிசிடிவி கேமரா இல்லை எனவும், அவரது காரில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். விபத்துக்கான சரியான சூழ்நிலைகள் மற்றும் காரணங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் இருந்த சரௌதி சோதனைச் சாவடியில் உள்ள கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சைரஸ் சென்ற கார் 20 கிமீ தூரத்தை வெறும் 9 நிமிடங்களில் கடந்தது தெரிய வந்துள்ளது.
மணிக்கு 134 கிமீ வேகத்தில் சென்றதால் கார் டிவைடரில் மோதியதாக போலீஸார் தெரிவித்தனர்.மேலும் விபத்தில் உயிரிழந்த மிஸ்திரி மற்றும் ஜஹாங்கீர் இருவரும் சீட் பெல்ட் அணியாமல் பின்னால் அமர்ந்திருந்ததும் தெரியவந்துள்ளது.
அதிவேகத்தில் வந்த கார் டிவைடரில் மோதிய பிறகு, முன் சீட்டில் உள்ள ஏர்பேக்குகள் முன் அமர்ந்திருந்தவர்களை விபத்தில் இருந்து தடுத்துள்ளது. ஆனால் சீட்பெல்ட் அணியாததால் பின்புற ஏர்பேக்குகள் செயல்படவில்லை. இதன் காரணமாகவே மிஸ்திரி விபத்தில் இறந்துள்ளார்.
விபத்து நடந்த இரவு மும்பையில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் மிஸ்திரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் தலையில் பலத்த காயம் அடைந்ததால் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மிஸ்திரியின் இறுதிச் சடங்குகள் இன்று (செப்-6) காலை 11 மணிக்கு மும்பை வோர்லி மயானத்தில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:யார் இந்த சைரஸ் மிஸ்திரி..? - சில குறிப்புகள்