அமெரிக்காவின் நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் சீரம் நிறுவனம் கோவோவேக்ஸ் தடுப்பூசியைத் தயாரித்துவருகிறது. இந்நிலையில், கோவோவேக்ஸ் தடுப்பூசியின் ஆய்வு இந்தியாவில் தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆதர் பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கோவோவேக்ஸ் தடுப்பூசி விநியோகம் ஜூன் மாதம் தொடங்கப்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்திருந்தார். இது குறித்து ஆதர் பூனவல்லா ட்விட்டர் பக்கத்தில், "இறுதியாக, கோவோவேக்ஸ் தடுப்பூசியின் ஆய்வு இந்தியாவில் தொடங்கியுள்ளது.
நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் சீரம் இணைந்து இத்தடுப்பூசியைத் தயாரித்துவருகிறது. ஆப்பிரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனாவுக்கு எதிராகச் செயலாற்றும் இது, 89 விழுக்காடு பயனளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியின் விநியோகம் இந்தாண்டு, செப்டம்பர் மாதம் தொடங்கப்படும் என நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சீரம் இணைந்து தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கு இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.