லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், சித்ரகூட் மாவட்டத்தில் உள்ளது பிரசித்பூர் கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் அசோக் பட்டேல்(55). இவருக்கும், அண்டை வீட்டில் வசிக்கும் கமலேஷ் குமாருக்கும் முன்விரோதம் இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச.29) அசோக் படேல் வீட்டிற்கு இரவு நேரத்தில் வந்த கமலேஷ் குமார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த அசோக் படேலின் மருமகன் சுபத்தின் மீதும் கமலேஷ் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆத்திரமடைந்த அசோக் படேலின் உறவினர்கள் கமலேஷ் குமாரின் வீட்டிற்கு தீ வைக்க முயன்றனர். இதற்கிடையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் அவர்களைத் தடுத்தனர். பின்னர் துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள் தலைமறைவாக உள்ள கமலேஷ் குமாரைத் தேடி வருகின்றனர்.
கமலேஷ் குமாரை கைது செய்வதற்காகத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக, அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் சுட்டுக்கொலை