ராஜஸ்தான் ஜெய்சல்மர் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான துப்பாக்கிச்சூடு பயிற்சி நடந்துவருகிறது. இந்நிலையில், வழக்கம்போல நேற்றிரவு (மார்ச் 2) பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர்.
இதில், உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (32) என்பவர் ஈடுபட்டுவந்தார். அப்போது, அவர் 150 மீட்டர் தூரம் வரை குறிவைத்தார். எதிர்பாராதவிதமாக அருகே இருந்த சக வீரர்கள் இருவர் மீது துப்பாக்கியின் குண்டுகள் பாய்ந்தன.
இதையடுத்து, வீரர்கள் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்துவந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு ஜோதாபூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
அதில் ஒருவர் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இறந்த வீரரின் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.