ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-படி வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. மேலும், அம்மாநிலம் யூனியன் பிரேதசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மசோதாக்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கதௌலி தொகுதி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் விக்ரம் சிங் சைனி காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, "மோடி நமது கனவை நிறைவேற்றியுள்ளார். ஒட்டுமொத்த நாடே தற்போது மகிழ்ச்சியில் உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்குவதற்கு உதவுமாறு ஹகிம்மை (காஷ்மீர் பாஜக தலைவர்) தொடர்பு கொண்டேன். ஆவலோடு காத்திருக்கும் நிர்வாகிகள் அனைவரும் இனிமேல் காஷ்மீருக்குச் சென்று, அங்குள்ள அழகான பெண்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். எந்தப் பிரச்னையும் கிடையாது. பிற மாநிலத்தைச் சேர்ந்த ஆண்களைத் திருமணம் செய்துகொண்டால், ஜம்மு காஷ்மீர் பெண்கள் மாநிலத்தின் நிரந்தர குடியுரிமையை இழக்க நேரிடும் என்பது கொடுமையானது" இவ்வாறு அவர் பேசினார்.