உலகம் முழுவதும் பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு வயதினரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உடலில் ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் இத்தொற்றிலிருந்து குணமடையும் வாய்ப்பு மிகவும் குறைவு என ஆய்வின் முடிவில் தெரியவந்தது.
இந்நிலையில், இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த நபர் ஒருவர், தற்போது கரோனாவுக்கு எதிரான போரிலும் வென்று குணமடைந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான நபர் ஒருவர், கடந்த சில நாள்களுக்கு முன் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு, லக்னோவில் உள்ள கெ.ஜி.எம்.யூ. மருத்துவமனை பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இவர் அதே மருத்துவமனையில் கடந்தாண்டு மே முதல் ஆகஸ்ட் வரை புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று அந்த நோயிலிருந்து மீண்டுவந்தார். எப்படி புற்றுநோயிலிருந்து வெற்றிக்கரமாக மீண்டுவந்தாரோ, அதேபோல இம்முறை ஒரே வாரத்திற்குள் கரோனா வைரஸ் பெருந்தொற்றிலிருந்தும் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளார்.
இவர் குணமடைந்தது குறித்து அந்த மருத்துவமனையின் துணைவேந்தர் எம்.எல்.பி. பட் கூறுகையில், "நிரிழவு நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் கரோனாவிலிருந்து குணமடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான். ஆனால் புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த நபர் தற்போது கரோனாவிலிருந்தும் குணமடைந்துள்ளது மற்ற நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையில் நம்பிக்கைதரக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் கரோனா வைரசால் இதுவரை 5,735 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,238 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 152 பேர் இத்தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: தந்தையை 1200 கிமீ சைக்கிளில் அழைத்துச் சென்ற சிறுமி - இவாங்கா ட்ரம்ப் நெகிழ்ச்சி