டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்ட 80-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாநாட்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆயிரத்து 500 பேர் கலந்துகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
அதில் 131 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் விமான, ரயில் பயணங்களின் அடிப்படையில் சிலர் கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாடு காவல் துறையினர் மாவட்ட வாரியாக மாநாட்டில் கலந்துகொண்டவர்களின் பட்டியலைச் சேகரித்தும்வருகின்றனர்.
கிடைக்கப்பெற்ற முகவரியில், சம்பந்தப்பட்ட நபர் இல்லையெனில், அவர்கள் நுண், கியூ பிரிவு காவல் துறையினரால் தேடப்படுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது தொலைபேசி எண்களைப் பயன்படுத்தி சைபர் கிரைம் காவல் துறையினரும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மதகுருக்களிடமிருந்து தகவல்களைச் சேகரித்து தேடுதல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் இதுவரை மாநாட்டில் கலந்துகொண்ட 75 பேர் கண்டறியப்பட்டு சோதனைக்குள்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி, மாநாட்டில் கலந்துகொண்ட நபர்கள் தாமாக முன்வந்து தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசின் சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'நிஜாமுதீன் மாநாடு; கரோனா பாதிப்பு உள்ள 617 பேர் மருத்துவமனையில்...!' - துணை முதலமைச்சர்