தமிழ்நாட்டின் ஊட்டி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரியில் வசிப்பவர் மாணவர் ஷெகலா ஷெரீன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை (நவ.20) வழக்கம்போல் பள்ளிக்கு சென்றார். பள்ளியில் உள்ள வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த சந்து ஒன்றில் இருந்து விஷப்பாம்பு ஒன்று வெளியே வந்தது. அது மாணவியின் காலில் கடித்தது.
இதனை அறிந்த மாணவி தன்னை பாம்பு கடித்து விட்டதாக ஆசிரியர் விகில் விஜீலிடம் கூறினார். ஆனால் அதனை பொருட்படுத்தாத ஆசிரியர், வழக்கம் போல் தொடர்ந்து பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் சுமார் 45 நிமிடங்கள் கழித்து மாணவி மயங்கி கீழே விழுந்தார். இதையடுத்து மாணவியை அருகில் உள்ள அரசு பொதுமருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்து மருத்துவர் மரியா, விஷமுறிவு மருந்து இல்லை எனக் கூறி சிகிச்சையை தாமதப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் அவளை கள்ளிக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாணவி ஷெரீன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாணவியின் இழப்பை தாங்காத சக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாநில உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: வயநாட்டில் பள்ளி வகுப்பறையில் விஷப்பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு.!