ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் சோனியா காந்தி குடும்பத்தாருக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 28 ஆண்டுகளாக அதன் பாதுகாப்புக்குள் சோனியா குடும்பத்தினர் இருந்து வந்தனர்.
கடந்த 8ஆம் தேதி அந்தப் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவருக்கும் சிஆர்பிஎப் மூலம் வழங்கப்படும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நவம்பர் 25ஆம் தேதி பிரியங்கா காந்தியின் டெல்லி இல்லத்துக்குள் ராகுல் காந்தி காரைப் போன்றே இருக்கும் இன்னொரு காங்கிரஸ் நிர்வாகியின் கார் அனுமதிக்கப்பட்டது. இது பெரும் சர்ச்சைக்குள்ளானது. எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து செய்யப்பட்டதால்தான் இதுபோன்ற நிகழ்வு நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. பிரியங்காவின் கணவர் வதோராவும் இதுகுறித்து தனது அதிருப்தியைப் பதிவு செய்திருந்தார்.
இதற்கிடையே எஸ்.பி.ஜி. சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று விவாதத்துக்கு வந்தது. அப்போது சோனியா காந்தி குடும்பத்துக்கு எஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமித்ஷா, பிரியங்காவின் பாதுகாப்பு தொடர்பான குறைபாடு தற்செயலாக நடந்தது. இதற்கும் எஸ்பிஜி விலக்கப்பட்டதற்கும் தொடர்பில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கறுப்பு நிற SUV காரில் வருவார் என்று பாதுகாப்புப் படையினரிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதே நேரத்தில், அதே கலர் SUV காரில், காங்கிரஸ் நிர்வாகி வந்திருக்கிறார். காரும் நேரமும் ஒரே மாதிரியாக இருந்தன. அதனால்தான் கார் பாதுகாப்பு சோதனை இல்லாமல் உள்ளே சென்றது. இது தொடர்பாக மூன்று அலுவலர்களை இடைநீக்கம் செய்துள்ளோம்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மெட்ராஸ் உயர் நீதிமன்றப் பெயரை மாற்றுங்கள்' - நாடாளுமன்றத்தில் முழங்கிய வைகோ