பிகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் உள்ள மொக்கமா (Mokama) தொகுதியின் சுயேச்சை சட்டப்பேரவை உறுப்பினர் அனந்த் சிங். இவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காவல் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் ஏகே-47 ரக ரைஃபிள் துப்பாக்கி, 22 லைவ் தோட்டாக்கள், இரண்டு வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அனந்த் சிங் மீது வழக்குப் பதியப்பட்டு தலைமறைவாகிய அவரை காவல் துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர். இந்நிலையில் அனந்த் சிங், கடந்த 14 ஆண்டுகளாக தான் அந்த வீட்டில் வசிக்கவில்லை என்றும் ஆகையால் தனக்கும் அந்தத் துப்பாக்கி, தோட்டாக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதனால் கைது குறித்து தான் அஞ்சவில்லை என்று சொன்ன அனந்த் சிங், இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் காவல் துறையிடம் தானே சரணடைவதாக தெரிவித்தார்.
2015ஆம் ஆண்டு பிகாரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், கொலை குற்ற வழக்கில் கைதான அனந்த் சிங் சிறையிலிருந்தே வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.