இந்திய, சீன எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்திற்கிடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக அந்நாடு தகவல் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கிடையே தொடர் பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி நரவானேவுடன் ஜூலை 3ஆம் தேதி எல்லை பகுதியான லேவுக்கு செல்கிறார்.
இதனிடையே, நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கக் கூடிய வகையில் விளங்கிய டிக் டாக், யூசி பிரவுசர், ஹலோ உள்ளிட்ட 59 சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய சேனல்களின் ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது.
போர் பதற்றம் உச்சகட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், இந்தியாவுடனான எல்லை பகுதிகளில் 20,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளது.