ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், சுரு பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 563ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, அப்பகுதி முழுவதும் சீல் வைத்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்புக்குள்ளான அனைவரும் கரோனா சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பாகாடியா மருத்துவமனை மருத்துவர் திலீப் சோனி கூறுகையில், "ஹரித்வாரிலிருந்து திரும்பிய தந்தை, மகன் ஆகிய இருவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் இருவருக்கும் தொற்று உறுதியானது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை அவர்களது குடும்பத்தினர் உள்பட 86 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறையினர் அப்பகுதி முழுவதும் சீல் வைத்து கிருமி நாசினி தெளித்தனர்.
மேலும் பொதுமக்கள் தகுந்த இடைவெளி பின்பற்றவும், முகக்கவசம் அணியவும், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டன. தற்போது, சுரு பகுதியில் 563 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் கரோனா தீவிரமடைந்த பகுதியாக மாற்றப்பட்டது.
ராஜஸ்தானில் இதுவரை 25 ஆயிரத்து 306 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல், 9 ஆயிரத்து 379 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 613 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் சுகாதாரத் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இதையும் படிங்க: கரோனாவை வென்ற 101 வயது பாட்டி