ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர். வெங்கடேஷ் பட்டினம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த எல்.ஜி பாலிமர்ஸ் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில் நேற்று(மே.7) அதிகாலை 2 மணியளவில் திடீரென கசிவு ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த கோர ஸ்டைரீன் விஷ வாயு கசிவின் காரணமாக, சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் நடந்து சென்றவர்கள், திடீரென மயக்கம் போட்டு விழுந்தனர். வாயுக் கசிவினால் ஆடு மாடுகள் உள்ளிட்ட செல்லப்பிராணிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்த ஸ்டைரீன் விஷ வாயுக் கசிவினால் இதுவரை ஒரு சிறுமி உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
![PTBC chemical reaches Vishakhapatnam to neutralise styrene gas leakage impact](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/excssfyumaiwcry_0805newsroom_1588902317_1040.png)
காற்றில் கலந்திருக்கும் ஸ்டைரீன் விஷ வாயுவின் நச்சுத் தன்மையை குறைப்பதற்கு பயன்படுத்தப்படும் பி.டி.பி.சி (பாரா-மூன்றாம் நிலை பியூட்டில் கேடகோல்) என்னும் ரசாயனத்தை அளிக்க வேண்டும் என்ற ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கோரிக்கை விடுத்ததையடுத்து, குஜராத் மாநில அரசு வழங்கியது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த விசாகப்பட்டின விமான நிலைய அலுவலர் ராஜ் கிஷோர், “தெற்கு குஜராத்தில் இருந்து டாமன் பகுதிக்கு சாலை மார்க்கமாக கொண்டு வரப்பட்டு, ஏறத்தாழ 500 கிலோ எடைக் கொண்ட பி.டி.பி.சி ரசாயனம் , பின்னர் அங்கிருந்து ஏர் இந்தியாவின் சரக்கு விமானம் மூலம் விசாகப்பட்டினம் கொண்டு வரப்பட்டது. பின் அங்கிருந்து அந்த ரசாயனம் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஒன்பது பேர் கொண்ட தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டது” என தெரிவித்தார்.
முன்னதாக, தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்தடைந்த ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, விஷ வாயுக் கசிவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க : சரிவின் விளிம்பில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள்!