கரோனா காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசு மூலம் மதிய உணவு வழங்க முடியவில்லை.
இதன் காரணமாக, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சமைத்த உணவுக்குப் பதிலாக உணவு தானியங்கள், சமைப்பதற்கு ஏற்படும் செலவுகளுக்கு முதல் தவணையாக அந்தந்த பள்ளிகளில் உணவு, பணம் அதற்காக வழங்கப்படும் எனப் புதுச்சேரி கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, இன்று ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நான்கு கிலோ அரிசியும், 290 ரூபாயும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நான்கு கிலோ அரிசியும் 390 ரூபாயும் வழங்கப்பட்டுவருகின்றன.
இதற்காக, புதுச்சேரி அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றில் ஏதேனும் ஒன்று எடுத்துவந்து இலவச அரிசி, அதற்கான தொகையை பெற்றுச் சென்றனர்.
இதனை, அந்தந்த அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வழங்கினர்.