கர்ப்பிணி ஒருவர் ஷ்ராமிக் விரைவு தொடர்வண்டியில் பயணம் செய்துள்ளார். அவருக்கு எதிர்பாராதவிதமாக பிரசவ வலி வரவே, அடுத்த நிறுத்தமான ஜர்ஷுகுடா தொடர்வண்டி நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
காவல் துறையினர் விரைந்து கர்ப்பிணியை மீட்டு தங்களின் வாகனத்தில் ஏற்றினர். மருத்துவர்களுக்கும், செவிலியருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் வருவதற்குள் கர்ப்பிணிக்கு வலி அதிகமானது.
அப்போது சம்பவ இடத்திலிருந்த காவல் உயர் அலுவலர் சாவித்திரி பல், தனக்குள்ள அனுபவத்தை வைத்து பிரசவம் பார்த்துள்ளார். அதன்படி அவருக்கு குழந்தை பிறந்ததை அடுத்து, தாயும்-சேயும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தற்போது இருவரும் நலமாக இருப்பதாகக் கூறியிருக்கிறது காவல் துறை வட்டாரம். பிரசவம் பார்த்து இரு உயிர்களைக் காப்பாற்றிய காவல் துறை உயர் அலுவலர் சாவித்திரிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.