புதுச்சேரி மாநிலத்தில் கரோனா நோய்த் தடுப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண், சுகாதாரத்துறை செயலர் பிரசாந்த் குமார், அத்துறை இயக்குநர் மோகன் குமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்,
கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்க முதற்கட்டமாக ரூபாய் 7.5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மாநிலத்திலுள்ள அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை அளிக்கக் கூடிய தனி அறைகள் 520 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்திலுள்ள மத்திய பல்கலைக்கழகம், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றில் 62 ஆயிரம் வெளிமாநில மாணவர்கள் பயின்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை விட முதலமைச்சருக்குப் பரிந்துரை செய்யவுள்ளதாகவும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ராஜ்ய சபா உறுப்பினராகும் ரஞ்சன் கோகோய்!