சர்வதேச அளவில் எறும்புண்ணிகள் அதன் செதில்களுக்காக வேட்டையாடப்படும் விலங்கினமாகும். ஆசியா, ஆப்ரிக்கா ஆகிய கண்டங்களின் காடுகளில் வாழும் எறும்புண்ணிகளில் மருத்துவ குணம் அதிகம் இருப்பதால், விலங்குகள் கடத்தலில் இவை முதலிடத்தில் உள்ளது.
குறிப்பாக, ஒடிசா மாநிலத்தில் எறும்புண்ணி கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசமான நிலையில் கடத்தல்காரர்களிடமிருந்து ஒரு எறும்புண்ணி மீட்கப்பட்டது. அதற்கு உரிய சிகிச்சை அளித்து பத்திரமாக வனப்பகுதியில் விடப்பட்டது. கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972இன் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து அதாகர் பிரதேச வன அலுவலர் (டி.எஃப்.ஓ) சஸ்மிதா லென்கா கூறுகையில், 'சில நாட்களுக்கு முன்பு மோசமான நிலையில் ஒரு எறும்புண்ணியை நாங்கள் மீட்டோம். அதை மருத்துவ கண்காணிப்பில் வைத்து, அதன் உடல் நிலை சில நாட்கள் கண்காணித்து வந்தோம். அதன் உடல் நிலை சீரானதைத் தொடர்ந்து, நேற்று (ஜனவரி 2) வனப்பகுதியில் விட்டோம். கடந்த ஓராண்டில் எறும்புண்ணி கடத்தல் தொடர்பான வழக்குகளில் 13 பேரை நாங்கள் கைது செய்துள்ளோம்' என்றார்.
மருத்துவ குணம் இருப்பதால் சில சிகிச்சை முறைகளுக்கு இது பயன்படுத்தப்படுகிறது. அதனால் கள்ளச் சந்தைகளில் செதில்களின் விற்பனை நடக்கிறது.