புதுச்சேரியிலுள்ள ஜிப்மர் மருத்துவமனை பயிற்சி மருத்துவர்களும், வெளி மாநிலத்திலிருந்து இம்மருத்துவமனையில் பணிபுரிந்து வருபவர்களும் ஆன்லைனில் உணவை பதிவுசெய்து சாப்பிட்டுள்ளனர். ஆனால் அதனை உட்கொண்ட பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், புதுச்சேரி உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் தன்ராஜ் தலைமையிலான குழுவினர் இன்று காலை கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை எதிரே உள்ள சம்பந்தப்பட்ட உணவகத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.மேலும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப் பயன்படுத்திய மஞ்சள் தூள் மற்றும் மிளகாய்த் தூள் உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து பேசிய உணவுத் துறை அலுவலர், தரமற்ற உணவு தயாரித்து வழங்கியது உறுதி செய்யப்படும்பட்சத்தில் உரிமையாளர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட தரமற்ற உணவை உறுதி செய்தால் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.