கோழிக்கோடு உன்னிகுளம் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி நேற்றிரவு தனது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரது பக்கத்து வீட்டுக்காரர் அச்சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்து வரம்பு மீறி நடந்துகொண்டதாக அறியமுடிகிறது.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மயக்க நிலையில் கிடந்துள்ளார்.
இதனிடையே, வழக்கம் போல கல்குவாரியில் கூலி வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய சிறுமியின் பெற்றோர், உடல்நலம் குன்றிய நிலையில் இருந்த தங்களது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு அந்த சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர், சிறுமிக்கு நேர்ந்த கொடுமை குறித்து கேட்டறிந்துள்ளார். பின்னர், இது தொடர்பாக ஏதுமறியாத அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அவரது உடல்நிலை மோசமடைந்த காரணத்தால் மேல் சிகிச்சைக்காக அச்சிறுமி கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த காவல்துறையினர், குற்றமரசாட்டப்பட்டவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் உறுதிசெய்யப்பட்டது.
இதற்கிடையில், சிறுமியின் உடல்நிலை முன்னேறி உள்ளதாக மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவித்தனர்.
கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த பெண்ணுரிமை செயல்பாட்டாளர் பிரியா பிள்ளை, "நாட்டில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிற நிலையில் இதை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் " என கோரினார்.