உத்தர பிரதேசம் மாநிலத்தின் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை, ஒருவர் நாட்டு கைத்துப்பாக்கியைக் காட்டி, கீழே தள்ளுகிறார். இதனை கண்டு அச்சம் கொண்ட அந்த மூதாட்டி எழுந்து தன் வீட்டிற்குள் ஓட முயற்சித்தபோது, அந்த நபர் தனது கையில் இருந்த துப்பாக்கியால் சுடுகிறார். சுடப்பட்ட அந்த மூதாட்டி கீழேவிழுந்து வலியால் துடிதுடித்து இறக்கிறார்.
இந்த சம்பவத்தை அந்த மூதாட்டியின் வீட்டருகே உள்ள ஒருவர் பதிவு செய்து பொதுத்தளத்தில் பதிவேற்றியுள்ளார்.
அண்மையில், வெளியான இந்த காணொலி சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த காணொலியை கண்ட தேசிய பெண்கள் ஆணையத்தினர், மூதாட்டியை சுட்டுக் கொன்ற குற்றவாளிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி காவல்துறை தலைவருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.
இதற்கிடையில், காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மோனு கைது செய்யப்பட்டுள்ளார். படுகொலைக்குப் பின்னர் அவருக்கு அடைக்கலம் கொடுத்த மற்றொரு நபரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைச் சம்பவம் நடைபெற்ற போது, அதனை தடுக்காமல் கொலையை படமாக்கிய பெண்ணின் அண்டை வீட்டாரும் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மனிதாபிமானமற்ற படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக தேசிய பெண்கள் ஆணையம் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : இலவச உணவு பெற 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் - அரவிந்த் கெஜ்ரிவால்