கரோனா பரவல் இந்தாண்டு மார்ச் மாதத்திற்குப் பின் இந்தியாவில் தீவிரமடைந்தது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டு, அனைத்து மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
கரோனாவில் தாக்கம் தற்போதுவரை முழுமையாக குறையாததால் பல்வேறு மாநிலங்களிலும் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், 2020-21ஆம் கல்வி ஆண்டில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகள் உள்ளிட்டவை குறித்த தெளிவான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், "வரும் கல்வியாண்டில் 10, 12ஆம் வகுப்பு குறித்து இதுவரை எவ்வித தெளிவான வழிகாட்டுதல்களும் இல்லை. இதன் காரணமாக மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும், மாணவர்கள் பல போட்டி தேர்வுகளுக்கும் தயாராக வேண்டும் என்பதால் ஒரு தேசிய வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட வேண்டும். இது மாணவர்களுக்குப் பேருதவியாக இருக்கும்.
கரோனா காரணமாக ஒடிசா மாநிலத்தில் மார்ச் 17ஆம் தேதிமுதல் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு வரும் டிசம்பர் 31ஆம் தேதிவரை கல்வி நிறுவனங்களைத் திறக்கப்போவதில்லை என்று முடிவெடுத்துள்ளோம்" என்றார்.
இதையும் படிங்க: யூ-ட்யூப் வீடியோக்களைப் பார்த்து பாதுகாப்பு அலாராத்தை வடிவமைத்த ஒடிசா மாணவர்