ஜம்மு- காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் சில்லி-பிங்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் சமீனா பேகம் (43). இவருக்கு ஜரினா என்ற மகள் உள்ளார். இந்தக் கிராமத்து பெண்கள் ஒன்றுக்கூடி காட்டுக்குள் சென்று மோர்ச்செல்லாவை (காட்டு காளான்கள்) எடுத்து வருவார்கள். இச்செயலை அப்பகுதி மக்கள் குச்சி என்று அழைப்பார்கள்.
ஆனால், காளான்களை எடுப்பதற்கு ஓடையைக் கடந்துதான் செல்ல வேண்டும். அதற்காக, ஓடையின் மேல் மரப்பலகைகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று மாலை கிராம மக்களுடன் சேர்ந்து சமீனாவும், ஜரினாவும் காளான்களை எடுத்துவிட்டு கிராமத்திற்குத் திரும்பினர்.
அப்போது, ஓடையின் மேல் அமைந்துள்ள மரப்பலகை மீது முதலில் ஜரினா தாண்ட முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் நிலைதடுமாறி நீருக்குள் விழுந்துள்ளார். இதைப் பார்த்து பதறிபோன சமீனா, உடனடியாக ஓடைக்குள் குதித்து காப்பாற்ற முயன்றார். நீரின் வேகம் அதிகமாகப் காணப்பட்டதால் இருவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் வருவதற்கு முன்பே, இருவரின் உடல்களையும் கிராம மக்கள் மீட்டிருந்தனர். இதுதொடர்பாக கிராம மக்கள் கூறுகையில், " மரப்பலகையைக் கடந்த செல்லும் முயற்சியில் இரண்டு ஆண்டுகளில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
பாலம் கட்டித்தாருங்கள் என, பல முறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" எனத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறை, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ரத்த மாதிரிகளை கண்டறிய நடமாடும் வாகன பரிசோதனை அறிமுகம்!