சென்னையச் சேர்ந்தவர் இட்லி இனியவன். இவர், இட்லி வியாபாரி என்பதால், இன்று இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொலான்ட் ட்ரம்ப்- பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் சந்திப்பை கெளரவிக்கும் வகையிலும், இரு நாட்டு தலைவர்களை வரவேற்கும் விதமாகவும், 50 கிலோ எடை கொண்ட இரண்டு பிரம்மாண்ட இட்லிகள் தயாரித்துள்ளார். மேலும் அந்த இரு இட்லிகளிலும் ட்ரம்ப், மோடி ஆகியோரின் உருவங்களை வரைந்துள்ளார்.
இதுதொடர்பாக இனியவன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், "இருபெரும் தலைவர்கள் சந்திக்கின்ற இன்றைய நாளில் அவர்களை வரவேற்கும் விதமாகவும், இந்நிகழ்வை பெருமைப்படுத்தும் விதமாகவும் 50 கிலோ எடையுள்ள இரண்டு பிரம்மாண்ட இட்லிகளை தயாரித்து, அவற்றில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரின் உருவங்களை வரைந்துள்ளேன்.
இந்திய உணவு வகைகளில் இட்லி மிகவும் சுவையானது மட்டுமல்லாமல், அது உடலுக்கு கேடு விளைவிக்காத உணவு என்பதால், அவற்றில் இருவரின் உருவத்தை வரைந்துள்ளேன். அதே போல் அமெரிக்க அதிபர் வருகை என்பது நிச்சயமாக இந்திய நாட்டிற்கு நலன் அளிக்கக் கூடியதாக இருக்கும் என்று நான் நம்புவதால், இந்த பிரம்மாண்ட இட்லிகள் மூலம் அவர்களை வரவேற்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: ‘அருமையான வரவேற்புக்கு நன்றி’ - மோடியை பாராட்டிய ட்ரம்ப்