ஊரடங்கால் மக்கள் வீட்டில் முடங்கியிருந்தாலும், சுவாரஸ்யத்துக்கு எந்த ஒரு பஞ்சமும் இல்லை. குறிப்பாக, திருமணங்கள் புதிய புதிய வடிவங்களில் நடைபெறுகிறது. வீட்டில் திருமணம், வீடியோ கால் திருமணம், சைக்கிள் திருமணம் என்ற பட்டியலில் தற்போது மளிகைக் கடை திருமணமும் இணைந்துள்ளது. அது எப்படிய்யா... மளிகைக் கடையில் மனைவி கிடைக்கும் என்ற கேள்விக்குப் பதிலாக திகழ்கிறது, உத்தரப் பிரதேச இளைஞரின் திருமண கதை.
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞரை, அவரின் தாயார் மளிகை கடைக்குப் பொருள்கள் வாங்கி வர அனுப்பியுள்ளார். அதன் பின்னர், சில மணி நேரத்திற்குப் பிறகு, வீட்டு வாசலில் குரல் ஒன்று கேட்டுள்ளது. வீட்டின் வெளியே சென்ற தாயாருக்கு மகனின் ஒற்றை வார்த்தை, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'இவங்க தான்... உங்கள் மருமகள்' என்ற மகனின் வார்த்தை, தாயாரின் இதயத்தில் பெரிய குண்டையே தூக்கிப் போட்டுள்ளது. இதைக் கடுகு அளவும் ஏற்றுக்கொள்ளாத இளைஞரின் தாயார், காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
அதில், "மளிகைக் கடைக்குச் சென்ற மகன் ஊரடங்கு விதிமுறையை மீறி, எங்கேயோ உள்ள ஒரு பெண்ணை மனைவி என வீட்டிற்கு அழைத்து வந்துள்ளான். எனக்கு இது யாருனே தெரியாது. இருவரையும் வீட்டிற்குள் விடமாட்டேன்" எனத் தெரிவித்தார், அந்த அப்பாவி தாய்.