மகாராஷ்டிர மாநிலம், புனேவில் உள்ள புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சியகத்தில் பணியாற்றி வரும் நபர் ஒருவர் அந்நிறுவனத்தின் உரிமையாளர், அவரது நண்பர்கள் ஆகியோரால் கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவரது புகாரை அடுத்து, காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில், தான் பணி நிமித்தமாக டெல்லி சென்றபோது ஏற்பட்ட கரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியிலிருந்து மீண்டும் புனே திரும்ப இயலாத சூழல் ஏற்பட்டதாகவும், அதனால் டெல்லியில் தனியார் விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கி, தொடர்ந்து அலுவலகப் பணத்தை செலவழித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டதை அடுத்து கடந்த ஜூன் மாதம் மீண்டும் புனே வந்த தன்னிடம் அலுவலகப் பணத்தை திருப்பி அளிக்குமாறு உரிமையாளர் வற்புறுத்தியதாகவும், பின்னர் அவர் தன்னுடைய இரண்டு நண்பர்களுடன் இணைந்து, தன்னை காரில் கடத்திச் சென்று, கண்மூடித் தனமாக தாக்குதல் நடத்தியதாகவும், தன்னுடைய பிறப்புறுப்பில் கிருமிநாசினியினை தெளித்து சித்திரவதை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரது புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.