மும்பை: புகழ்பெற்ற இந்திய செவ்வியல் இசைக்கலைஞரும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 89.
கடந்த 2019ஆம் ஆண்டு மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருக்கு, உடலின் இடதுபுறம் செயலிழந்தது. வீட்டில் வைத்து சிகிச்சை பெற்று வந்த உஸ்தாத் குலாம் முஸ்தபா கானின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வரும் மார்ச் மாதம் வந்தால் அவர் தனது 90ஆவது வயதில் அடியெடுத்து வைத்திருப்பார்.
மார்ச், 3ஆம் தேதி, 1931ஆம் வருடம், நான்கு சகோதரர்கள், மூன்று சகோதரிகள் கொண்ட குடும்பத்தின் மூத்த மகனாக உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் பிறந்தார்.
செவ்வியல் இசையின் அடிப்படை பயிற்சியை தன் தந்தையிடம் பெற்ற கான், பின்னர் அவரது உறவினர் உஸ்தாத் நிசார் ஹுசைன் கானின் கீழ் இசையைக் கற்றுக்கொண்டார்.
இவர் கடந்த 1991ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2006ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருதும், 2018ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் பெற்றார். சமகாலத்தில் இயங்கிவரும் இந்திய கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிகப்பெரிய அங்கீகாரமான சங்க நாடக அகாடமி விருது கானுக்கு 2003ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
உஸ்தாத் குலாம் முஸ்தபா கானின் மறைவுக்கு இசை பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்களின் அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.
கானின் மறைவுக்கு, பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்," உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் சாஹேப் மறைவான செய்தி மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. அவர் நல்ல பாடகர் மட்டுமல்ல, ஒரு நல்ல மனிதரும்கூட," என்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். ரஹ்மான், கானை இனிமையான ஆசிரியர் என்று நினைவுகூர்ந்துள்ளார். மேலும் அவர், "அனைவருக்கும் மிக இனிமையான ஆசிரியர்... கஃபூர்-உர்-ரஹீம் அடுத்த உலகில் உங்களுக்கு ஒரு சிறப்பு இடத்தைத் தருவார் # உஸ்தாத் குலாம்முஸ்தபா" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கான் காலமானதை அறிந்து தனது மனம் உடைத்துவிட்டது என்று தெரிவித்துள்ள உஸ்தாத் அம்ஜத் அலிகான்,"கான் நம் நாட்டின் மிகவும் மரியாதைக்குரிய பல்துறை பாடகர்களில் ஒருவராக இருந்தார். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். அவரது ஆத்மா அமைதியுடன் இருக்கட்டும்" என்று ட்வீட் செய்துள்ளார். உஸ்தாத் குலாம் முஸ்தபா கான் இறுதி சடங்குகள், இன்று மாலை சாண்டாக்ரூஸ் மயானத்தில் வைத்து நடைபெறுகிறது.
இதையும் படிங்க: ஆந்திராவில் கபடி விளையாடிக் கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்