கேரள காவல்துறை அவசர சட்டத்திற்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், தற்போது அது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவசர சட்டத்திற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் வழங்கினார். சமூக வலைதளத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் தாக்குதல்கள், அவதூறுகள், பாலியல் தொந்தரவுகள், அருவருக்கத்தக்க விமர்சனங்கள் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசிதழில், "காவல்துறை அவசர சட்டம் பிரிவு 118 ஏ-வில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சமூக வலைதளங்கள் மட்டுமல்லாமல் அனைத்து ஊடகங்களும் இதன் கீழ் வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது. தைபர் தாக்குதல்களை எதிர்கொள்ள போதுமான சட்டம் இல்லை எனக் கூறப்பட்டுவந்த நிலையில், மாநில அமைச்சரவை இந்த அவசர சட்டத்தை கொண்டுவந்தது.
அவசர சட்டம் குறித்து தெளிவுப்படுத்தாமல் அதனை நிறைவேற்றியுள்ளது சுதந்திரமான பத்திரிகைத்துறைக்கு கெடு எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சட்டத்தின் மூலம், சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றின் மூலமாக அவதூறு செய்தி பரப்பும் பட்சத்தில், அவர்களுக்கு ஐந்தாண்டு சிறை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. குற்றம் கடுமையாக கருதும் பட்சத்தில் இரண்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள காவல்துறை அவசர சட்டத்தின்படி, யார் வேண்டினாலும் எந்த செய்தி நிறுவனத்தின் மீது அல்லது செய்தியின் மீது புகார் தெரிவிக்கலாம். பிணையில் வெளிவராத குற்றமாக இது கருதப்படுகிறது. எனவே, புகார் அளிக்கப்படும் பட்சத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை காவல்துறை கைது செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவசர சட்டம் குறித்த தெளிவு இல்லாத காரணத்தால் இது தவறாக பயன்படுத்தப்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.