மேற்கு வங்கத்தின் பிர்பாம் மாவட்டத்தின் போல்பூர் பகுதியில் அமைந்துள்ளது விஸ்வ - பாரதி பல்கலைக்கழகம். வங்கக்கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் தொடங்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், திறந்தவெளி பல்கலைக்கழகமாகும். அதாவது சுவர்கள் இன்றி தொடங்கப்பட்ட பல்கலைக்கழகம்.
நான்கு சுவர்களுக்குள் செய்யப்படும் எந்தவொரு போதனையையும் உதவாது என்று தாகூர் நம்பியதால், இந்த பல்கலைக்கழக அமைப்பை அவர் தொடங்கினார். இந்தப் பல்கலைக்கழகம் பாரம்பரியமாக இதனைக் கடைப்பிடித்து வருகிறது.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தரப்பில் வெளியாட்களின் வருகையை கட்டுப்படுத்துவதற்காகவும், பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நடக்கும் விற்பனையை தடுப்பதற்காகவும் விஸ்வ - பாரதி பல்கலைக்கழத்தைச் சுற்றி சுவர் எழுப்ப முடிவு செய்யப்பட்டது. இதன் முதற்கட்டமாக போஸ் மேளா மைதானத்தைச் சுற்றி சுவர் எழுப்ப திட்டமிடப்பட்டது.
இதற்கு அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதுகுறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைப் பற்றி முடிவு செய்வதற்காக மாணவர்கள், ஆசிரம அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் இன்று (ஆக. 17) பல்கலைக்கழக பிரார்த்தனை கூடத்திற்கு வந்தனர். அப்போது துணை வேந்தரின் செய்தித் தொடர்பாளருக்கு அலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதனை எடுக்கவில்லை.
முன்னதாக கல்லூரி நிர்வாகத்திற்கும் வர்த்தக சங்கத்திற்கும் இடையே சுவர் கட்டும் பணியால் பிரச்னை எழுந்தது. மேலும் நிர்வாகத்தின் தரப்பில் இரண்டு நுழைவு வாயில்கள் கட்டப்பட்டதோடு, சுவர் கட்டுவதற்கான கட்டுமானப் பொருள்களும் கொண்டு வரப்பட்டன.
இன்று காலை கட்டுமானப் பணிகள் தொடங்கவிருந்த நிலையில் விஸ்வ - பாரதி பல்கலைக்கழக கட்டுமானப் பணிகளைக் கண்டித்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சுவர் கட்டப்பட்டு வரும் இடத்திற்கு வந்தனர். அப்போது அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த கட்டுமானப் பொருள்களை சேதப்படுத்தியதோடு, இரண்டு நுழைவு வாயில்களையும் ஜேசிபி இயந்திரத்தால் இடித்து அவர்கள் தரைமட்டமாக்கினர்.
தொடர்ந்து கட்டடம் கட்டுவதற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்ட கேம்ப் அலுவலகத்தையும் மக்கள் அடித்து உடைத்தனர். இந்தச் சம்பவம் கல்லூரி நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் ஆந்திர அரசு - மத்திய அரசு தலையிட சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்!