ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் அந்த நாடுகளின் நகரங்கள் முக்கிய பங்காற்றும் நிலையில், நமது நாட்டில் உள்ள நகரங்களில் அப்படி ஒரு நிலைமை என்பது பகல் கனவாகவே உள்ளதாக சர்வதேச ஆய்வுகள் கூறுகின்றன.
அம்ருத் திட்டம்
இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நகர்ப் பகுதிகளை புனரமைக்கவும், நாடு முழுவதும் ஏராளமான ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கவும், புதிதாக அம்ருத் (AMRUT) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு, நாடு முழுவதும் முதற்கட்டமாக 100 நகரங்களை தேர்வு செய்து படிப்படியாக இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அம்ருத் திட்டத்தின் முன்னேற்ற நிலவரம் குறித்து மத்திய அரசு உறுதியளித்தபடியான இடைக்கால அறிக்கையில், நாடு முழுவதும் இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில், 5,151 திட்டங்கள் மூலம் பல்வேறு வகையான மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதாக சமீபத்திய பொருளாதார கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
ஏமாற்றம்
இந்த 100 நகரங்களில் அம்ருத் திட்டத்தை செயல்படுத்தும் பணியில் சிறப்பு நிபுணத்துவம் பெற்றவர்கள் அடங்கிய ஆலோசனைக் குழுக்கள், மேற்பார்வை செய்ய மேலாண்மை ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டிருந்தாலும், உண்மை நிலவரம் என்பது மிகவும் ஏமாற்றமளிப்பதாகவே உள்ளது.
கடந்த 2019 நவம்பர் 14ஆம் தேதி நிலவரப்படி, ரூ 22,569 கோடி மதிப்பிலான 1,290 திட்டங்கள் மட்டுமே நிறைவு பெற்றுள்ளது.இது மொத்த திட்டங்களில் தோராயமாக 11 சதவீதம் மட்டுமே. எஞ்சிய திட்டங்கள் அனைத்தும் இன்னும் ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) விடும் நிலையிலேயே உள்ளன.
இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில், அகமதாபாத், அமராவதி உள்ளிட்ட 20 நகரங்களில் பணிகள் மெச்சத்தகுந்த வகையில் முன்னேற்றம் கண்டு முன்னணியில் உள்ள நிலையில், சிம்லா, சண்டிகர் போன்ற 20 நகரங்களில் பணிகள் முடிய வெகு காலம் ஆகும் நிலைதான் உள்ளது என அரசாங்கமே கூறுகிறது.
ரூ.4,400 கோடி ஒதுக்கீடு
டெல்லி நகரம் காற்று மாசு மற்றும் நச்சுப் புகையால் திணறும் நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ளுர் தேவைகளை அறிந்து முன்னுரிமை வழங்க உரிய திட்டங்களை மத்திய அரசு வகுக்க வேண்டும்.
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து உச்சபட்ச நச்சானதால், மத்திய அரசு பொது சுகாதார அவசர நிலையை பிறப்பிக்க நேர்ந்தது. காற்றின் தர குறியீட்டின்படி உலகிலேயே மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி இடம் பெற்றுள்ளது.
இது மட்டுமின்றி, நம் நாட்டின் மக்கள் தொகையில் 76 சதவீதம் பேர், காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ள பகுதிகளில் வாழ்க்கை நடத்துவதாக மற்றொரு அதிர்ச்சி புள்ளி விவரமும் கூறுகிறது. இதனால் காற்று மாசு சவாலை எதிர்கொள்ள மட்டும் தற்போதைய பட்ஜெட்டில் நான்காயிரத்து 400 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
முன்னேற்றம் இல்லை
சுற்றுச்சூழல் மேம்பாடு திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி ஆதாரங்கள் இல்லாததும், ஒரு பெரும் தடையாகவே உள்ளது. இதனால் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகள் நகரங்களை பெருமளவில் பாதிக்கின்றன.
அம்ருத் திட்டத்தை செயல்படுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.48 ஆயிரம் கோடியை மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்படி ஒவ்வொரு ஸ்மார்ட் நகரங்களுக்கும் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வீதம் ஐந்தாண்டுகளுக்கு மத்திய அரசு செலவிடும்போது, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் அதற்கு ஈடான தொகையை இத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்வதும் அவசியம்.
இப்படி திட்டமிட்டுதான் நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக முன்னேற்றும் முயற்சிகளை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. அம்ருத் திட்டத்தை ஸ்வச் பாரத், ஸ்கில் இந்தியா, ஆவாஸ் யோஜனா போன்ற மத்திய அரசின் திட்டங்களுடன் இணைந்து செயல்படுத்தும் பட்சத்தில் கூடுதல் பலன் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டாட்சி உணர்வுடன் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு விரும்பினாலும், இந்த அம்ருத் திட்டம் செயல்பாட்டில் உள்ள எந்த நகரங்களிலும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த இந்த ஐந்தாண்டுகளில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை தருவதாக உள்ளது.
இதையும் படிங்க: ‘பாஜக ஆட்சியில் இருக்கக் கூடாது... இதுதான் காங்கிரஸின் எண்ணம்’ - பாஜக சாடல்