நாட்டில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றால் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்படுகின்றனர். கரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் சில கிராம மக்களால் கரோனா பரிசோதனை செய்ய முடியாத நிலை இருந்தது.
இதைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து வசதி இல்லாத கிராமங்களுக்கு நேரடியாக செல்லும் நடுமாடும் கரோனா ஆய்வகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று (ஜூன் 18) தொடக்கி வைத்தார். இந்த ஆய்வகத்தின் மூலம் நாள்தோறும் 25 RT-PCR சோதனைகளும், 300 ELISA சோதனைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், "கடந்த பிப்ரவரி மாதம் முதல் கரோனா ஆய்வகம் அமைக்கப்பட்டது. தற்போது, நாடு முழுவதும் 953 கரோனா ஆய்வகங்கள் உள்ளன. இதில், 699 ஆய்வகங்கள் அரசின் மையங்கள் ஆகும். பரிசோதனை மையங்களுக்கு செல்ல முடியாத மக்களுக்காக நடமாடும் கரோனா ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.